பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று - ஒரு பார்வை
இன்று 2.10.2022 காலை 9:15 மணி அளவில் தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டரில் திரையிடப்பட்ட பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று பார்க்கச் சென்றேன்.
செல்லும் வழியெல்லாம் பொன்னியின் செல்வன் கதையை மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டேன். புதினத்தில் உள்ளதையும் திரையில் வருவதையும் ஒத்துப் பார்க்க வேண்டும் அல்லவா? திரையரங்கம் சென்று நான் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் பொன்னியின் செல்வன் அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளது என்றால் அது அப்படத்திற்கும் பெருமை எனலாம் 😆. திரைப்படத்திற்கு முன் போடப்பட்ட விளம்பரப் படங்கள் என் பொறுமையை வெகுவாக சோதித்தனர். ஒவ்வொரு விளம்பர படத்திற்கு முன் போடப்படும் சென்சார் போர்டு சர்டிபிகேட் படத்திற்கு உள்ளதோ என்று பார்த்து ஏமாந்தேன்!
ஒரு வழியாக UA சான்றிதழுடன் பொன்னியின் செல்வன் என்ற பெயர் பார்த்தவுடன் மயிர் கூர்செரிய நிமிர்ந்து அமர்ந்தேன். திரையில் குதிரைகள் ஓட ஓட எனது மனக்குதிரை ஏனோ திரையில் கண்டனவற்றை புதினத்தோடு ஒப்பிட ஆரம்பித்தது. திரைக்கதை ஓட்டத்திற்காக கதையில் சில இடைச் செருகல்கள் ஒட்டப்பட்டு இருந்தது. புத்தகத்தைப் படித்தவர்களுக்கு மணியம் ஓவியங்களாக பழக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு மணிரத்தினத்தின் நேர்த்தியான தேர்வு மற்றும் தோட்டா தரணியின் கலைவண்ணத்தை ஒளிப்பதிவாளர் கண்ணிற்கு விருந்தாக படைத்திருந்தார். கண்ணிற்கு மட்டும் விருந்தா காதுகளுக்கு நான் தருகிறேன் என்று போட்டி போட்டு ஏ ஆர் ரகுமானின் இசை மலழயில் நனைய செய்தது.
ஐந்து பாகங்களாக உள்ள கதையை கருமாறாமல் தருவதற்கான பெரும் முயற்சி ஒவ்வொரு கட்டத்திலும் தெரிகிறது. வானத்தில் தோன்றிய வால் நட்சத்திரம் யாருக்கானது? சுந்தரச் சோழருக்கு பின் அரசாள போவது யார்? பாண்டிய ஆபத் பாந்தவன்கள் சபதம் மற்றும் நந்தினியின் கனவு நனவானதா? போன்ற கேள்விகளுக்கு விடை தேட அடுத்த பாகம் 2023 ல் வரும் வரை காத்திருக்கலாம் அல்லது புதினம் வாங்கி படத்தின் கதாபாத்திரங்களை மனதில் கொண்டு வாசித்து அறிந்து கொள்ளலாம்! சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால், பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரைப்படம் மூலம், அமரர் கல்கியின் வரிகளுக்கும் மணியம் ஓவியங்களுக்கும் ஒலி ஒளி மூலம் உயிர் கொடுத்து தன்னிலை உணர்த்தியுள்ளனர் மணிரத்தினம் குழுவினர்!!
Comments
Post a Comment